பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட கொடுமைகள் இடம்பெறுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களினதும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வேந்தர்களின் உரிமையினை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (5) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவி விலக்கிய எமக்கு வேந்தரை பதவி விலக்க செய்வது பெரிதொரு விடயமல்ல என பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக வேந்தர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட பல கொடுமைகள் இடம்பெறுகின்றன. பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம், பாசிஷவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் கை கடிகாரம் அணிந்து கொண்டு பல்கலைக்கழகத்துக்கு வரக்கூடாது. முதலாம் ஆண்டு மாணவி சீத்தை துணியிலான ஆடை அணிய வேண்டும், காதணி, மாலை ஆகியவற்றை அணியக்கூடாது என பகிடிவதைகள் இடம்பெறுகின்றன.
ஜனநாயகம் தொடர்பில் பலர் தமக்கு ஏற்றாட்போல் வரைவிலக்கணம் செய்துகொள்ளலாம். வீடுகளை எரித்து, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் அவர்களுக்கு ஒரு மணித்தியாலத்தில் பிணை வழங்கப்பட்டதை கைத்தட்டி வரவேற்றமை ஜனநாயகம் அல்ல.
பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக வேந்தர்கள் ஆகியோரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment