கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய இப் பரீட்சைகளையே ஒக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பாடசாலைக் கல்வியை உச்ச அளவில் முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை அடுத்த வருடத்துக்கான பாடசாலை நூல்கள், இலவச சீருடை உள்ளிட்ட அனைத்திற்குமான நிதி தொடர்பில் திரைசேரியுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
சுசில் பிரேமஜயந்த புதிய கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடத்தியுள்ள முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அமைச்சர், 2020ஆம் ஆண்டு 194 பாடசாலை நாட்கள் இருந்த போதிலும் கொரோனா வைரஸ் சூழல் காரணமாக மேல் மாகாணத்தில் 94 நாட்களே பாடசாலைகள் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் 117 நாட்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த வருடத்தில் 101 நாட்கள் மேல் மாகாணத்திலும் ஏனைய மாகாணங்களில் 143 நாட்கள் பாடசாலைகள் நடைபெற்றுள்ளன. அதே போன்று இந்த வருடத்தில் 139 நாட்கள் பாடசாலை தினங்களாக கணிக்கப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட உள்ள கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை ஒக்டோபர் அல்லது நவம்பரில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையும் அக்காலங்களில் நடைபெறும். இந்த வருடத்தில் டிசம்பர் 23ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
அதேபோன்று 2023ஆம் ஆண்டு நாம் சகல தரப்பினருடனும் கலந்துரையாடி பாடசாலை நாட்களை உச்ச அளவில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த வருடத்திற்கான பாடங்களை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த ஆண்டுக்கான இலவச பாடநூல்கள், இலவச சீருடைகள் மற்றும் பரீட்சைத் திணைக்களத்திற்கு தேவையான காகிதாதிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு திறைசேரியுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாடசாலை மாணவர்களின் போசணை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எந்த வகையிலும் போதாது. இது தொடர்பில் உலக உணவு நிறுவனம், யுனிசெப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையால் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 42 இலட்சம் மாணவர்களையும் அது பாதித்துள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment