தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும் : அரசியலமைப்பை கிழித்தெறிந்து விட்டு அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தால் அது நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கும் - கெஹலிய ரம்புக்வெல்ல - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும் : அரசியலமைப்பை கிழித்தெறிந்து விட்டு அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தால் அது நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கும் - கெஹலிய ரம்புக்வெல்ல

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பை கிழித்தெறிந்து விட்டு அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என நினைத்தால் அது நாட்டின் எதிர்காலத்தை சீரழிப்பது உறுதி. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) மூன்றாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் 56,71, 83, 88 - 89 காலங்களில் அழிவுகள் ஏற்படாதிருந்திருந்தால் நாடு தற்போது பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கும். அதற்கிணங்க இன்று நாடு எதிர்கொண்டுள்ள நிலைக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும். எவரும் கை கழுவி செல்ல முடியாது. கடந்த இரண்டு வருட கால செயற்பாடுகளே இதற்கு காரணம் என எவராவது சொன்னால் அது பெரும் விந்தையாகும்.

அதேபோன்று எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அரசியலமைப்பிற்கணங்கவே அதனை மேற்கொள்ள வேண்டும். அதை மீறி செயற்பட்டால் எவருக்கும் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாமல் போகும்.

பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம் எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் 225 பேரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம். அப்போதுதான் நாம் இணைந்து சர்வதேச முன்னிலைக்கு செல்ல முடியும்.

நாட்டு மக்கள் 22 மில்லியன் பேரும் 225 பேருக்கும் இந்த நாட்டை பாரம் கொடுத்துள்ளார்கள். அதை பொறுப்பேற்றுச் செயற்பட்டால் நாம் மீண்டும் இந்த நாட்டை சிறப்பாக கட்டியெழுப்ப முடியும் .

நாடு 53 பில்லியன் டொலரை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. ஒருவர் மட்டுமே அதனை பொறுப்பேற்க முடியாது. நெருக்கடியான சூழ்நிலையில் தவறுகளை சரி செய்து நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் இணைந்து செயற்படுவது அவசியம்.

நாடு பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டில் 22 மில்லியன் மக்களும் துரதிர்ஷ்டமான நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒருவர் ஒருவர் மீது விரல் நீட்டுவது முறையல்ல.

அரசியலமைப்பை கிழித்து எறிந்துவிட்டு அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று நினைத்தால் அது நாட்டின் எதிர்காலத்தை சீரழித்து விடும் என்றார்.

No comments:

Post a Comment