மட்டக்களப்பு மாவட்டத்தில் சமையல் எரிவாயு (லிற்றோ) தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சமையல் எரிவாயு (கேஸ்) வெற்று சிலிண்டர்களுடன் மக்கள் சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு சென்று சிரமப்படுவதை காணமுடிகிறது.
நேற்று (04) காலை மட்டக்களப்பு மாவட்ட லிற்றோ சமையல் எரிவாயு ஏகவிநியோகஸ்தரான எஸ்.எஸ்.எம்.சொல்கார் நிறுவனத்தின் காத்தான்குடியிலுள்ள களஞ்சியசாலைக்கு முன்பாக லிற்றோ சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக வெற்று சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்றனர்.
இதன்போது அங்கு காத்தான்குடி பொலிசாரும் வரவழைக்கப்பட்டதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தலைமையிலான பொலிசார் அங்கு வந்து நிலைமைகளை பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்து கொண்டனர்.
இதன்போது கொழும்பு களஞ்சிய சாலையிலிருந்து நேற்று (04) காலை கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை வரிசையில் நின்ற பொதுமக்களில் நூறு பேருக்கு பொலிசாரின் உதவியுடன் விநியோகம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாளாந்தம் 2500 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும் தற்போது மிக குறைவாகவே எரிவாயு சிலிண்டர்கள் வருவதாகவும் இதனால் மக்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்குவதாவும் மட்டக்களப்பு மாவட்ட லிற்றோ சமையல் எரிவாயு ஏக விநியோகஸ்தரான எஸ்.எஸ்.எம்.சொல்கார் நிறுவனத்தின் உரிமையாளர் எ.எல்.எச்.ஏம்.இப்றாகீம் தெரிவித்தார்.
மக்கள் தினமும் இங்கு வந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற சிரமப்படுவதாகவும் தொடர்ச்சியாக தினமும் பத்தாயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கினால் அதனை விநியோகம் செய்வதன் மூலம் தட்டுப்பாடு ஓரளவு நிவர்த்தியாகும் எனவும் தெரிவித்தார்.
(புதிய காத்தான்குடி நிருபர்)
No comments:
Post a Comment