திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
நேற்று (04) திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தினைப் பார்வையிடுவதற்காக வருகை தந்தபோதே அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்,
கொவிட்டினால் நாடு பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருந்தாலும், அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
அதனடிப்படையிலேயே ஜனாதிபதியின் வழிகாட்டலில் தற்பொழுது கப்பல் போக்குவரத்து துறைமுக அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.
உலகில் பிரசித்தி பெற்ற துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலை இயற்கைத் துறைமுகம் கடந்த காலம் முதல் அபிவிருத்தி என்ற ஒன்றைக் காணாத சூழலில் இருந்து வந்துள்ளது.
இவ்வேளையில் தற்போது அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்கின்ற நடவடிக்கைகளில் கூடுதலான கவனத்தைச் செலுத்தி வருகின்றது.
நான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் திருகோணமலைத் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.
கப்பல் மற்றும் துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேவர்தனவின் முயற்சியில் திருகோணமலை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முக்கிய கோரிக்கைகளான வீதி அபிவிருத்தி, கப்பல் போக்குவரத்து போன்றவற்றிற்கும், போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக இந்த திருகோணமலை இயற்கைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும், இதனால் நாட்டில் ஏற்படுகின்ற வேலையில்லாப் பிரச்சினைகளுக்கும் பாரிய ஒரு தீர்வு எட்டப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.
(அப்துல்சலாம் யாசீம்)
No comments:
Post a Comment