(எம்.மனோசித்ரா)
சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கடன் பெறுவதால் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் யாதெனில், நஷ்டத்தில் செல்லும் நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாகும். இதன் ஊடாக ஒருபோதும் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்கக் கூடிய இயலுமை ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே காணப்படுகிறது. எனவே இவ்வருடம் மக்களுக்கு சுபீட்சம் மிக்கதாக இருக்க வேண்டுமாயின் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பின்னால் ஒன்று திரள வேண்டும். நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் திட்டமிடலற்ற வேலைத்திட்டங்களின் காரணமாக புத்தாண்டு தினத்திலும் சமையல் எரிவாயு மற்றும் பால்மா என்பவற்றுக்காக பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்த்து தமது பிள்ளைகளுக்காக மக்கள் இவ்வாறு வரிசையில் காத்திருப்பது கவலைக்குரியதாகும். புத்தாண்டை கொண்டாடுவதற்கு எவ்வித வசதிகளும் இன்றி, பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ விடுமுறையில் ஊருக்குச் சென்று நாடு திரும்பியுள்ளார்.
டொலர் நெருக்கடியின் காரணமாக நாடு நாளாந்தம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும் 3.1 பில்லியன் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள கடன் தொகையை கணக்கில் சேர்த்துதான் மத்திய வங்கி ஆளுனர் இந்த மாயாஜாலத்தை காண்பித்துள்ளார் என்று எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் மூலம் தெரியவருகிறது.
சீனாவிடமிருந்து யுவான்களாகவே கடன் கிடைக்கப் பெறும். எனினும் அதனை நாம் டொலர்களிலேயே மீள செலுத்த வேண்டியேற்படும். அவ்வாறெனில் இந்த கடன் தொகை மூலம் எமக்கு கிடைக்கும் நன்மை என்ன?
இந்தியாவின் கடன் திட்டத்தின் மூலம் நாட்டுக்கு தேவையான அரிசி, கிழங்கு, வெங்காயம், மரக்கறி மற்றும் பழங்கள் என்பவற்றை பெற முடியும். அவ்வாறில்லை என்றால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடுவதை எவராலும் தடுக்க முடியாது.
சீனாவிடமிருந்து கிடைக்கும் கடன் தொகையை பொருள் இறக்குமதிக்காக அந்நாட்டு சந்தைக்கே மீண்டும் அனுப்ப வேண்டியேற்படும். காரணம் வேறு எந்த நாட்டிலும் யுவான் புலக்கம் கிடையாது.
டொலர் நெருக்கடிக்கு அரசாங்கத்தினால் தீர்வினைக்காண முடியாமல் போயுள்ளது. இந்த நெருக்கடியின் காரணமாக மத்திய வங்கியின் அனுமதியின்றி ஏனைய வங்கிகளால் டொலரை வழங்க முடியாது.
டொலர் இன்மையால் தம்மால் கடன்சான்று பத்திரத்தை விடுவிக்க முடியாமலுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31 ஆம் திகதி அரசாங்கம் கோடிக்கணக்கில் நாணயத் தாள்களை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலர் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு நாணயத் தாள்களை அச்சிடுவதால் இலங்கை ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க முடியுமா?
அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை இதன் மூலம் வழங்க முடியும். வேறு எதனையும் இவ்வாறு நாணயத் தாள்களை அச்சிடுவதன் மூலம் செய்ய முடியாது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பணவீக்கம் இரட்டை இலக்கங்களில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றில் எதைப் பற்றியும் அரசாங்கத்திற்கு அக்கறையில்லை.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அமைச்சர்கள் எரிவாயு நிறுவனத் தலைவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறு நிறுவனத் தலைவர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. மாறாக பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அமைச்சர்கள் அவரவர் கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர்களை ஜனாதிபதியே நியமித்துள்ளார். எனவே அவரிடமே இது பற்றி கேள்வியெழுப்ப வேண்டும்.
இவ்வாண்டில் பஞ்சம் ஏற்படும் என்று விவசாயத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அரசாங்கம் அதனை மறுக்கின்ற போதிலும், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை மற்றும் விவசாய பயிர்ச் செய்கைகள் 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளமை, மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமை என்பன விவசாய நிபுணர்களின் எச்சரிக்கை உண்மை என்று நிரூபிக்கின்றன.
முறையற்ற நிர்வாகத்தினால் 2021 முழுமையாக சீரழிந்தது. 2022 ஆம் ஆண்டு அதே போன்றுதான் ஆரம்பித்துள்ளது. புதுவருடத்தில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் இவர்கள் பழைய பாதையிலேயே பயணிப்பர். முகங்கள் மாற்றமடைகின்றன என்பதற்காக நாடு மாற்றமடையப் போவதில்லை.
டொலர் நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கடன் பெறுவதால் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் யாதெனில், நஷ்டத்தில் செல்லும் நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாகும். இதன் ஊடாக ஒருபோதும் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
சர்வதேச நாணய நிதியத்தை நாடமலுள்ள அரசாங்கம் தேசிய சொத்துக்களை விற்பனை செய்து, அதன் மூலம் டொலரைப் பெற எண்ணுகிறது. தேசிய சொத்துக்களை விற்பதாக எம்மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அரசாங்கம் தற்போது அதனையே செய்கிறது.
மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்க கூடிய இயலுமை ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே காணப்படுகிறது. டொலர் நெருக்கடிக்கான தீர்வு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மாத்திரமே காணப்படுகிறது. அவரை தவிர வேறு தலைவர்கள் நாட்டில் இல்லை.
எனவே இவ்வருடம் மக்களுக்கு சுபீட்சம் மிக்கதாக இருக்க வேண்டுமாயின் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பின்னால் ஒன்று திரள வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் மாத்திரமே மக்களின் கைகளில் பணப்புலக்கம் காணப்பட்டது.
எனவே எதிர்காலத்திலும் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சுபீட்சமான காலம் மலரும் என்றார்.
No comments:
Post a Comment