(ஆர்.யசி)
நாட்டின் நிதி நெருக்கடி நிலைமையில் தேசிய சவால்களை சமாளிக்க அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன்கள் மூலமாக கடந்த ஆண்டின் ஒன்பது மாதங்களில் நாட்டின் மொத்த கடனானது இரண்டு ட்ரில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் இலங்கையின் மொத்தக் கடனானது 14.5 ட்ரில்லியன் ரூபா எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்ட சவால்கள், கொவிட்-19 மூலமாக ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் நாட்டின் தேசிய தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2021 அக்டோபர் மாதம் வரையிலான ஒன்பது மாதங்களில் இவ்வாறு இரண்டு ட்ரில்லியன் ரூபாவினால் கடன் தொகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் இலங்கையின் மொத்தக்கடனானது 14.5 ட்ரில்லியன் ரூபா எனவும் மத்திய வங்கி கூறுகின்றது.
எவ்வாறு இருப்பினும் இந்த செயற்பாடுகள் பாரிய தாக்கத்தை செலுத்தும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றது.
இது குறித்து பொருளாதார நிபுணரும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநருமான டப்ளியூ.ஏ.விஜேவர்தன கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே நாட்டின் பொருளாதார நெருக்கடி உச்ச அளவில் தாக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளதுடன் அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, இறக்குமதி தட்டுப்பாடு என்பன ஏற்பட்டதாக தெரிவித்த அவர், கொவிட்-19 வைரஸ் தாக்கம் மற்றும் கடன் நெருக்கடிகளினால் கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டுகளில் 13.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் நாட்டின் தேசிய வருமானத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இவ்வாறான பின்னணியில்தான் 2022 ஆம் ஆண்டு கடன் நெருக்கடியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தேசிய மற்றும் சர்வதேச சந்தையில் எம்மால் சமாளிக்க முடியாத அளவிற்கு பணப்பற்றாக்குறையுடன் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. வங்கிகளில் கூட டொலர்கள் மற்றும் ரூபா பற்றாக்குறை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
No comments:
Post a Comment