சுதந்திர தினத்தை முன்னிட்டு 21 வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் - பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

சுதந்திர தினத்தை முன்னிட்டு 21 வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் - பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்

(இராஜதுரை ஹஷான்)

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை 4.30 மணி முதல் சுதந்திர தின நிகழ்வு நிறைவு பெறும் வரை சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள 21 வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன. அத்துடன் சுதந்திர தினத்தை கருத்திற் கொண்டு கொழும்பு நகரில் மாத்திரம் 3 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவர் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமானது. ஒத்திகை நடவடிக்கை நாளை மறுதினம் வரை இடம்பெறும் சுதந்திர சதுக்க வளாகத்தின் வீதிகளில் பொதுமக்கள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி ஒத்திகையினை கருத்திற் கொண்டு காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுதந்திர சதுக்க வளாக வீதி முடப்படும். மாற்று வழி குறித்து ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று காலை 10 மணி முதல் சுதந்திர தின நிகழ்வு நிறைவடையும் வரை சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் உள்ள 21 பிரதான வீதிகள் தற்காலிகமாக மூடப்படும். பொதுப் பயணிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துவது அவசியமாகும்.

சுதந்திர தினத்தன்று கொழும்பு நகரில் சுமார் 3 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். சுதந்திர தினத்தில் கலந்துகொள்ளும் விசேட விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழுடன் அவர்கள் வருகை தரும் வாகனத்தை தரிப்பதற்குமான விசேட முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

காலை 7.30 மணிக்கு பிறகு விசேட விருந்தினர் வருகை இடம்பெறவுள்ளதுடன், காலை 11.15 மணியளவில் இருந்து மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலை 11.20 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர சதுக்க வளாக வீதி முடக்கப்படுவதால் பொதுப் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முறையான திட்டங்கள் பொலிஸாரால் செயற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினருக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment