(எம்.மனோசித்ரா)
தேசிய சம்பள கொள்கையை மீறும் வகையிலேயே அரசாங்கம் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக அரச சேவையிலுள்ள ஊழியர்களின் மத்தியில் பாரிய கலவரத்தினை ஏற்படுத்துவதாக அமையும். இது அரச சேவையை மேலும் வீழ்ச்சியடைச் செய்யும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர்கள், வைத்தியர்கள், தாதிகள் உள்ளிட்ட அரச சேவையிலுள்ள அனைத்து தரப்பினரதும் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.
தேசிய சம்பள கொள்கையை நடைமுறைப்படுத்தி தேசிய ஆளணி மற்றும் சம்பள ஆணைக்குழுவானது அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. அதற்கமையவே 2008 ஆம் ஆண்டு சம்பள முரண்பாட்டுக்கான தீர்வும் வழங்கப்பட்டது.
எனினும் தற்போதைய அரசாங்கம் தேசிய கொள்கைகளை மீறியே செயற்படுகிறது. அண்மையில் அரச தாதியர் சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய அவர்களது சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதன் எதிர்ப்பை வெளியிடுகிறது.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் அரச சேவையிலுள்ள ஊழியர்களின் மத்தியில் பாரிய கலவரத்தினை ஏற்படுத்துவதாக அமையும். இது அரச சேவையை மேலும் வீழ்ச்சியடைச் செய்யும். இதற்கான தீர்வு காண்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. அந்த குழுவின் பகுப்பாய்விற்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment