(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அங்கீகாரத்துக்குட்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே இனிமேல் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் லிற்றோ மற்றும் லாப் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் இலங்கை தரநிலை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அகியோருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவில், இடைக்கால உத்தர்வை பிறப்பித்தே மேன் முறையீட்டு நீதிமன்றம் இதனை நேற்று ( 17) அறிவித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோரினால் இரண்டு சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கும் நேற்று மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போதும், தரமற்ற வகையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீள பெற்றக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.
சந்தை மற்றும் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக, தரமான புதிய சிலிண்டர்களை விநியோகிக்கும் போது கட்டணம் அறிவிடப்படக் கூடாது எனவும் இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
அத்துடன் சமயல் எரிவாயுவின் உள்ளடக்கம் மற்றும் கலவைகலின் விகிதம் உள்லிட்டவற்றை சிலிண்டரில் குறிப்பிட வேண்டும் எனவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் அறிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகித்தமையை மையப்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 8 ஆம் திகதி இந்த எழுத்தாணை மனு (ரிட்)தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'விநிவித பெரமுன' வின் பொதுச் செயலரும் சமூக செயற்பாட்டாளருமான நாகானந்த கொடித்துவக்கினால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவில் தற்போதும், பாவனையாளர்களிடம் உள்ள, அரைவாசி பயன்படுத்தப்பட்டுள்ள எரிவாயு சிலின்டர்களை மீளப் பெற்று, அது தொடர்பில் குறிப்பிட்ட ஒரு தொகையை பாவனையாலர்களுக்கு பணமாக வழங்கப்படல் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து, பொருத்தமான நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தனது இடைக்கால உத்தரவில் அறிவித்துள்ள நிலையில், மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் 2022 ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்த்து.
இந்த மனுவின் இடைக்கால உத்தரவினை நீதிமன்றம் நேற்று அரிவித்த பின்னர், இலங்கை தரக்கட்டளை நிறுவனத்துக்காக மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி மனோகர ஜயசிங்க, சமயல் எரிவாயுவின் உள்ளடக்கம் அல்லது கலவை தொடர்பில் தீர்மானிக்கும் விஷேட கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெற இருந்த போதும், அவசரமாக அக்கூட்டம் நேற்று முன் தினம் 16 ஆம் திகதி இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.
அந்த கலந்துரையாடலில், சமயல் எரிவாயுவில் உள்ளடங்க வேண்டிய ' ப்ரொபேன்' இன் அளவு 30 வீதமாக இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
No comments:
Post a Comment