ஒமிக்ரோன் வைரஸ் : தடுப்பூசிக்கு பதிலாக மாத்திரை...! - News View

About Us

About Us

Breaking

Friday, December 17, 2021

ஒமிக்ரோன் வைரஸ் : தடுப்பூசிக்கு பதிலாக மாத்திரை...!

ஐரோப்பிய நாடுகளில்தான் தற்போது ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு அதிகளவு உள்ளது. இதனால் இந்த பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் பைசர் மாத்திரை மீது தனது கவனத்தை திருப்பி உள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.

தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் உருமாறிய புதிய கொரோனா வைரசான ஒமிக்ரோனை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிக்கு பதில் பைசர் மாத்திரைகள் நல்ல பலன் அளிப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த மாத்திரை பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும் இறப்புகளையும் கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்கும் சக்தி கொண்டது என அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

நோய் அறிகுறி உள்ளவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால் குணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள் பைசர் மாத்திரையை பயன்படுத்த முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில்தான் தற்போது ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு அதிகளவு உள்ளது. இதனால் இந்த பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் பைசர் மாத்திரை மீது தனது கவனத்தை திருப்பி உள்ளது.

இந்த நாடுகளில் இன்னும் இதற்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் அவசரகால பயன்பாட்டுக்காக முன்கூட்டியே பைசர் மாத்திரையை பயன்படுத்தலாம் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஐரோப்பிய நாடுகள் விரைவில் புதிய வகை மாத்திரையான பைசர் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் பைசர் நிறுவன சி.இ.ஓ ஆல்பர்ட் போர்லா கூறும்போது, உலகையே தற்போது அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து தப்பிக்க, தங்களுடைய பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால், அதன் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பைசர் நிறுவனம், கொரோனா பரவலில் இருந்து தப்பிப்பதற்கு, Paxlovid என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.

கொரோனா அறிகுறிகள் கொண்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை கொடுப்பதன் மூலம் உயிரிழப்போரின் விகிதம் 89 சதவீதம் குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் ஐந்து நாட்கள் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு இந்த மாத்திரையை கொடுத்தால், கொரோனா ஆபத்து 88 சதவீதம் குறைந்துவிடுவது, பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இந்த பரிசோதனைக்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 2,246 பேருக்கு, இந்த மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 0.7 சதவீதம் பேர் மட்டுமே 28 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இந்த மாத்திரை நல்ல செயல்திறனுடன் இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா இது குறித்து நேற்று கூறுகையில், Paxlovid மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒமிக்ரோன் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment