கடன் பற்றுறுதிப் பத்திரத்தை தரும்பட்சத்தில் நாட்டின் மொத்த எரிவாயு தேவையையும் நிவர்த்தி செய்ய முடியும் - லாப் நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 17, 2021

கடன் பற்றுறுதிப் பத்திரத்தை தரும்பட்சத்தில் நாட்டின் மொத்த எரிவாயு தேவையையும் நிவர்த்தி செய்ய முடியும் - லாப் நிறுவனம்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான கடன் பற்றுறுதிப் பத்திரத்தை (எல்.சி) திறந்து தரும்பட்சத்தில் நாட்டின் மொத்த தேவையையும் நிவர்த்தி செய்யக் கூடியதும், தேவைக்கேற்ற விதத்தில் எரிவாயுவை கொண்டு வருவதற்கு நாம் தயார் என லாப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே.எச்.வேகபிட்டிய சிங்கள நாளேடொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்நாட்டின் நுகர்வோர் மாதத்திற்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மெட்ரிக் டொன் வரையிலான சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு நாட்டு மக்கள் சகலருக்கும் தேவையான சமையல் எரிவாயு முழுவதையும் சர்வதேச எரிவாயு வழங்குனர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடிவதுடன், தேவையேற்படின், லிட்ரோ நிறுவனத்துக்கும் அவற்றை வழங்குவதற்கு தம்மால் முடியும் என வேகப்பிட்டிய மேலும் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக தமது நிறுவனத்துக்கு தேவையான எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு முடியாதுள்ளது. இதற்கு அரசாங்கம் தலையிட்டு எல்.சி.க்கான டொலர் தொகையை விடுவித்து தரும்பட்சத்தில் சிறந்த தரத்திலான சமையல் எரிவாயுவை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நாம் தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனத்தினால் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இரண்டு கப்பல்களிலுள்ள எரிவாயு சிறந்த தரமின்மை காரணமாக கப்பலிலிருந்து அவற்றை இறக்கிக் கொள்வதற்கு நுகர்வோர் அதிகார சபை தடை விதித்துள்ளது.

இதன்படி, 3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவைக் கொண்ட கப்பலொன்றும், 3,200 மெட்ரிக் டொன் எரிவாயுவைக் கொண்ட கப்பலொன்றும் துறைமுகத்தில் சிக்குண்டு காணப்படுகிறது.

No comments:

Post a Comment