சிக்கல்களுக்கு தீர்வு காணாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது : அனைத்து கட்சிகளின் அபிலாசைகளையும் பெறுவது கட்டாயம் - அமைச்சர் ரொஷான் ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, October 3, 2021

சிக்கல்களுக்கு தீர்வு காணாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது : அனைத்து கட்சிகளின் அபிலாசைகளையும் பெறுவது கட்டாயம் - அமைச்சர் ரொஷான் ரணசிங்க

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காணாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. வரவு செலவு திட்டத்திற்கு பின்னர் தேர்தல் முறைமை தொடர்பில் உறுதியான தீர்வை பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் அபிலாசைகளையும் பெறுவது கட்டாயமானது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. கடந்த மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்த முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் கொவிட் தொற்று நிலைமையை எதிர்கொண்டுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில், நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறைமையில் நடத்துவதா என்ற பிரச்சினை காணப்படுகிறது. இம்முறை மாத்திரம் பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம், அத்துடன் எதிர்கால தேவைக்கு அமைய புதிய தேர்தல் முறைமையை திருத்தியமைக்கலாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல் நிலைக்கு தீர்வு காணாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. தேர்தல் முறைமை தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்தின் ஊடாக ஒரு தீர்வை காணுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரம் நவம்பர் மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பின்னரே மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து பாராளுமன்றில் ஒரு தீர்வு எட்டப்படும். தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளில் யோசனைகளையும் பெறுவது அவசியமாகும்.

இனப் பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது தேர்தலை நடத்துவதற்கு சர்வதேச மட்டத்தில் அழுத்தம் பிரயோகிப்பது பயனற்றது என்றார்.

No comments:

Post a Comment