(எம்.ஆர்.எம்.வசீம்)
அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் வியாபாரிகளிடமும் நிறுவனங்களிடமும் வழங்கி ஒதுங்கிக் கொண்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்வது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாளுக்குநாள் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கிறது. அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.
அதனால் பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் வியாபாரிகளிடமும் நிறுவனங்களிடமும் வழங்கி விட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கின்றது. மக்களைவிட வியாபாரிகளே அரசாங்கத்துக்கு முக்கியமாகும்.
அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் இந்தளவு வங்குராேத்து நிலைக்கு செல்வதற்கு காரணம், ஆட்சியாளர்களின் பலவீனமாகும். தனக்கு அரசியல் அனுபவம் இல்லை என ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்திருப்பதாக தெரிய வருகின்றது.
ஜனாதிபதிக்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே தெரிவித்தோம். என்றாலும் ஜனாதிபதி தற்போதாவது அதனை ஏற்றுக் கொண்டுள்ளதை வரவேற்கின்றோம். அதனால் நாட்டை ஆட்சி செய்ய அரசியல் அனுபவம் இல்லை என்றால், அது தொடர்பில் அனுபவம் உள்ள ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment