(எம்.மனோசித்ரா)
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடொன்று எட்டப்படவில்லை. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். எனவே இது வீணாக கலவரமடையக் கூடிய காரணியல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள திறைசேரி தகவல்களின் அடிப்படையில் கருத்து ரீதியிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவே தெரியவந்துள்ளது. இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
நான் மின்சக்தி அமைச்சராக செயற்பட்ட போது எனது நிலைப்பாட்டை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு அறிவித்திருக்கின்றேன்.
வெளிநாட்டு முதலீடுகள் தேவையற்றவை என்று கூற முடியாது. ஆனால் மின்சார சபையின் செயற்பாடுகளை பாதிக்காத வகையில் அவை காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே இது தொடர்பில் வீண் கலவரமடையத் தேவையில்லை.
இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். மின்சக்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சு என்பவையே இது தொடர்பில் நிலைப்பாட்டினை அறிவிக்கக்கூடிய நிறுவனங்கள் ஆகும் என்றார்.
No comments:
Post a Comment