(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்
தமிழரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அன்று கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டத்தை இப்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எந்தத் தேவையும் இன்றி அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த பேரினவாத காலனித்துவ ஆதிக்க ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராடும் போது அதனை ஒடுக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 30 ஆண்டுகளாக தமிழர்களை வேட்டையாடியது.
எங்களின் பெண்களை சித்திரவதை செய்வதற்கும், எங்களின் இளைஞர்களை கேட்பாரின்றி கொலை செய்வதற்கும் எங்களது தேசத்தின் செல்வங்களை கொள்ளையடித்து தென்னிலங்கைக்கு கொண்டு வரவும் அந்த அவசரகால சட்டத்தை கொண்டு வந்தீர்கள்.
ஆனால் இன்று சிங்கள மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக இந்த அவசரகால சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். இந்தப் போக்கு உங்களை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும், எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment