(ஆர்.யசி)
இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டாலும் அதனை தாண்டிய வீரியத்துடன் டெல்டா வைரஸ் தொற்று வேகமாக பரவக்கூடிய தன்மை காணப்படுவதாகவும், தடுப்பூசிக்கு கட்டுப்படாத உச்சகட்ட டெல்டா வைரஸ் பரவல் நிலையொன்று ஏற்படலாம் எனவும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டாலும் முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.
உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆய்வு நிறுவனங்கள் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கும் கொவிட் வைரஸ் ஆய்வுக்குழுவில் அங்கம் வகிக்கும் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர, தற்போது டெல்டா வைரஸ் தொற்றுநோய் குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதானது, தடுப்பூசி ஏற்றாதவர்களிடம் இருந்து டெல்டா வைரஸ் வேகமாக பரவுகின்ற காரணத்தினால் வைரஸ் திரிபுபட அதிக வாய்ப்புகள் உள்ளது. இது புதிய வைரஸ் ஒன்றினை உருவாக்க வாய்ப்புகள் உள்ளது. குறைந்த அளவிலான பொதுமக்கள் தடுப்பூசி ஏற்றாது நிராகரித்தாலும் கூட அது முழு நாட்டையும் பாதிக்கும்.
இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டாலும் நபர்களுக்கு டெல்டா வைரஸ் தொற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
எனவே தடுப்பூசிகள் ஏற்றிக் கொண்டாலும் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் எம்மால் நீண்ட காலத்திற்கு இந்த சவால்களில் இருந்து விடுபட முடியாத நிலையே காணப்படும்.
No comments:
Post a Comment