தமிழ் தலைமைகள் முட்டு கொடுத்த கடந்த அரசாங்கத்தினால் ஒரு அரசியல் கைதியை கூட விடுதலை செய்ய முடியவில்லை. ஆனால் தற்போதைய எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் 16 தமிழ் அரசியல் கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு விடயமாக இருந்தாலும் சரி இராணுவ முகாம் காணிப் பிரச்சனைகள், மேச்சல் தரை பிரச்சனை உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு மிக நீண்ட நாட்களாக புரையோடிக்கிடக்கின்ற தீர்க்க முடியாத ஏனைய அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே நாங்கள் அரசுடன் இணைந்து பயணிக்கின்றோம். எங்களுடைய மக்களின் உரிமை சார்ந்த அரசியல் பயணத்தோடு இணைத்து அபிவிருத்தி சார்ந்த அரசியலையும் நாம் முன்னெடுப்போம்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பின் ஊடாக எமது உரிமை சார்ந்த அரசியலிற்கு சமாந்தரமாக அபிவிருத்திசார்ந்த செயற்பாடுகளையும் முன்னேடுப்போம். அதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தம்மாலான உதவிகளை எமக்காக செய்வார்.
அண்மையில் கூட அநுராதபுர சிறைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பார்வையிட்டுருந்தார்.
எதிர்வரும் நாட்களில் நிச்சயமாக எமது மக்களுக்கு இருக்கின்ற இரண்டு மிக முக்கியமான பிரச்சினை அதில் ஒன்று தீர்க்கப்படாத நீண்டகால பிரச்சினை அடுத்து அபிவிருத்தி இது இரண்டினையும் பெற்றுக் கொள்வதற்காக நாம் சேர்ந்து பயணிப்போம்.
கடந்த காலத்தில் எந்த அபிவிருத்தியும் வடகிழக்கில் காணமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை இருந்தது. ஆனால் கடந்த அரசை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களைத்தான் தமிழ் தலைமைகளும் செய்தார்களே ஒழிய மக்களின் பிரச்சனைக்கான எந்தவொரு தீர்வையோ அபிவிருத்தியையோ பெற்றுக் கொடுக்க முடியாத நிலமையைத்தான் காணக்கூடியதாக இருந்தது. அதனல்தான் நான் கடந்த தேர்தலில் அரசுக்கு ஆதரவு வழங்கினேன். மக்களும் எமது மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பாக இருவரை தேர்ந்து எடுத்துள்ளனர்.
தீர்க்கப்படாமல் இருக்கின்ற அனைத்து பிரச்சினைகளையும் எங்களது காலத்தில் தீர்த்து வைப்பதற்கான முயற்சியை நாம் செய்துவருகின்றோம் நிச்சயமாக செய்துகொடுப்போம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment