பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் ஒன்றினைந்து பதிலளிப்பேன். இவரது கருத்துக்கள் கவலையளிக்கின்றன என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
அமைச்சர்களான சரத் வீரகேகரவும், காமினி லொகுகேவும் ஒன்றினைந்து தனக்கு எதிராக செயற்படுவதாக ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும குறிப்பிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கருத்துக்கள் கவலையளிக்கின்றன. இவருக்கும் எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் இவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அடிப்படையற்றதாகும்.
1983 ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் அங்கம் வகிக்கிறேன். அன்று தொடக்கம் இன்று வரை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். இவரை போன்று பலரை அரசியலில் சந்தித்துள்ளேன்.
இவர் ஏன் எம்மீது இந்தளவிற்கு வெறுப்புடன் உள்ளார் என்று தெரியவில்லை. இவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுடன் ஒன்றினைந்து பதிலளிப்பேன் என்றார்.
மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகேவிற்கு நெருங்கிய ஒருவர் அரசியல் சிபாரிசுடன் பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வறான கீழ்த்தரமான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம் பலமுறை எடுத்துரைத்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை எனவும், அமைச்சர்களான காமினி லொகுகே, சரத் வீரசேகர ஆகியோர் ஒன்றினைத்து தன்னை தாக்குவதால் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் பாதுக்க பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார் இவ்விரு அமைச்சர்கள் மீதும் குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment