(ஆர்.யசி)
கொவிட் அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியிலும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், நாட்டில் சீனி மற்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்து அவர், நாட்டில் சீனி தட்டுப்பாடு ஏற்படவில்லை. எனினும் வியாபாரிகள் ஒரு சிலரின் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் தற்போதும் நாட்டில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளது. மாதம் 45 ஆயிரம் மெட்ரிக் தொன்னே மக்களின் பாவனைக்கு தேவைப்படுகின்றது. ஆகவே அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு சீனி எம்மிடம் உள்ளது.
நாளை மறுதினம் தொடக்கம் சகல மொத்த வியாபாரிகளுக்கும் சீனி கொள்வனவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். அதேபோல் அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒரு கிலோ சீனி 120/130 ரூபாய் என்ற நிர்ணய விலையில் வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment