(இராஜதுரை ஹஷான்)
கொவிட் தாக்கத்தினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்து கொண்டு அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காமல் தமக்குரிய பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய வேண்டும். மக்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் பொறுப்புடனும், விட்டுக் கொடுப்புடனும் செயற்பட வேண்டும். அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. ஆலோசனை வழங்கி இனி பயனில்லை. வசதி படைத்தோர் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கிறார்கள். தவறுகளை திருத்திக் கொண்டு சிறந்த முறையில் பயணிக்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு பலமுறை ஆலோசனை வழங்கியுள்ளோம். ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் செயற்படுகிறார்கள்.
ஆகவே இனி ஆலோசனை வழங்குவது பயனற்றது.கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் பொறுப்புடனும், விட்டுக் கொடுப்புடனும் செயற்பட வேண்டும் என அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள். நாட்டு மக்கள் பலவற்றை தியாகம் செய்து விட்டார்கள். அரசியல்வாதிகளும் தியாகம் செய்ய வேண்டும்.
சுனாமி, யுத்தம் ஆகிய காலங்களில் நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டார்கள். தற்போதைய நிலையை ஒரு அனர்த்த நிலையாக கருதி செல்வம் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இனி வரும் காலத்திலாவது அனைவரது முகங்களிலும் மகிழ்ச்சி இருக்க ஒரு தீர்மானத்தை ஒன்றிணைந்து எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment