(செ.தேன்மொழி)
ஒழுக்க விதிகள் மற்றும் சட்ட விகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களை மேற்பார்வை செய்யும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்கிரமரத்னவுக்கு தெரிவித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படும் ஒழுக்க விதிகளுக்கு புறம்பான மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் அண்மை காலமாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அடையாளம் காணப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களது பணி இடைநிறுத்தம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில், இது போன்ற செயற்பாடுகளினால் ஒட்டு மொத்த பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் இவ்வாறான விவகாரங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அடையாளம் காணப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை, இத்தகைய பொலிஸ் உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்கிரமரத்னவுக்கு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment