வன்னி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கைகளின் போது உறவினர்களிடம் பணம் அறவீடு செய்யப்படுகின்றமை அம்மக்களிடம் பல்வேறு துயரங்களை ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று (01.06.2021) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் "கொரோனா" தொற்று தாக்கத்திற்கு உள்ளாகி இறப்பினை தழுவி கொண்டவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு வவுனியா நகரசபையினால் நிதி அறவிடப்படுகிறது.
குறித்த மூன்று மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இறப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யும் இடமாக வவுனியா அமைந்துள்ளது.
வவுனியா நகர சபை சடலமொன்றை தகனம் செய்ய 7 ஆயிரம் ரூபாவினை அறவிட்டு வருகின்றனர்.
தற்போதைய கடினமான சூழலில் வாழும் மக்கள் இந்த தொகையினை வழங்க முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே மக்களின் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment