(எம்.மனோசித்ரா)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கான சட்ட நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தோடு கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு திங்கட்கிழமை முதல் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல், மீன் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment