கூட்டுக் கட்சிகளுக்குள் முரண்பாடு வருவது உலக அரசியலில் வழமை : முதலில் சிங்கள மக்களையே பாதிக்கும், அதன் பின்னரே சிறுபான்மையை பாதிக்கிறது : கோத்தபாயவை ஆட்சிபீடம் ஏற்ற முதலில் களமிறங்கியவர்கள் நாங்கள்தான் - ஐக்கிய காங்கிரஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

கூட்டுக் கட்சிகளுக்குள் முரண்பாடு வருவது உலக அரசியலில் வழமை : முதலில் சிங்கள மக்களையே பாதிக்கும், அதன் பின்னரே சிறுபான்மையை பாதிக்கிறது : கோத்தபாயவை ஆட்சிபீடம் ஏற்ற முதலில் களமிறங்கியவர்கள் நாங்கள்தான் - ஐக்கிய காங்கிரஸ்

நூருல் ஹுதா உமர்

விலையுயர்வு, அரசியல் தலம்பல்கள் என்பன இந்த நாட்டில் வாழும் 70% சிங்கள மக்களையே முதலில் பாதிக்கிறது. அதன் பின்னரே மீதமாக இருக்கும் சிறுபான்மையை பாதிக்கிறது. இதனுடாக சிறுபான்மை மக்கள் தமது பிரச்சினை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளான இலங்கை மக்கள் தேசிய கட்சி மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனையில் (29) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கம் வீழ்த்தப்பட்டால் முதலில் பாதிக்கப்பட போவது சிங்கள மக்கள்தான். கடந்த கால அசம்பாவிதங்களை அது நடக்கும் போது அந்த அரசாங்கங்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. அப்படி ஒரு கொடிய செயலை இந்த அரசாங்கம் செய்யவில்லை. கூட்டுக் கட்சிகளுக்குள் முரண்பாடு வருவது உலக அரசியலில் வழமை. 

கடந்த காலங்களில்கூட ஒரு தேரர் கேட்டு கொண்டதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டு இராஜினாமா செய்தார்கள். அதை அப்போதைய அரசின் பிரதானி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்படுத்தவில்லை என்பது நாம் அறிவோம். 

ஆளும் தரப்பில் இப்போது எழுந்திருக்கும் குழப்பத்தை தீர்க்கும் ஆளுமையானவராக பசிலை நம்புகிறோம் அவருக்கு இந்த பிரச்சினைகளை சிறப்பாக கையாளும் ஆளுமை இருக்கிறது. அது போலவே பிரதமர் மஹிந்தவும் எல்லோரையும் அரவணைத்து செல்லும் திறமை கொண்டவர். 

இப்போதைய ஜனாதிபதி கோத்தபாயவை ஆட்சிபீடம் ஏற்ற முதலில் களமிறங்கியவர்கள் நாங்கள்தான். மக்களின் நலனில் கடந்த நல்லாட்சியை விட இந்த அரசு சிறப்பாக தொழிற்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. பதவியேற்று 2 வருடங்களை நெருங்கும் கோத்தா அரசு உலகை மட்டுமின்றி நாட்டிலும் தாக்கத்தை செலுத்தி வரும் கோவிட்-19 உடன் போராடி சிறப்பான ஆட்சியை செய்கிறது.

2005 முதல் இன்று வரை மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து வரும் பங்காளி கட்சியாக இருந்து வருகிறோம். ஆனாலும் ஏனையவர்களுக்கு செய்தது போன்று அவர்கள் எங்களுக்கு எதுவித நலவும் இதுவரை செய்யவில்லை என்பது கவலையான விடயம். 

அவர்களின் நல்லது கேட்டதில் துணையாக இருந்த பங்காளி கட்சியான எங்களை இந்த அரசு பலப்படுத்தினால் தமிழ் முஸ்லிம் மக்களின் மனதை வென்று சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகம் பெற கூடியதாக இருக்கும்.

இப்போதைய காலத்தை பொறுத்தவரை முஸ்லிங்களின் பிரதான கட்சிகளாக இருந்த சகல காங்கிரசுகளையும் மக்கள் நிராகரிக்க ஆரம்பித்துள்ளதுடன் ஐக்கிய காங்கிரஸ் (உலமா கட்சியின்) பக்கம் மக்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனை சரியாக பயன்படுத்தி எங்களுக்கான தொழில் வாய்ப்பு பங்கீடுகள், இதர வாய்ப்பு அரசினால் வழங்கப்பட்டால் எங்களினால் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இந்த பொதுஜன கூட்டணிக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்றார். 

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நாகராசா விஸ்ணுகாந்தன் மற்றும் ஐக்கிய காங்கிரசின் பொதுச் செயலாளர் ஸாஹித் முபாரக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment