(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது குறித்தும், அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்தும் அரசாங்கம் பேசிக் கொண்டு இருக்காது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அரசாங்கம் இன்றும் அரசியல் கைதிகளை வைத்துக் கொண்டு பிரசாரம் செய்கின்றனர். நாளை (இன்று) பொசன் போயா, முடிந்தால் அரசியல் கைதிகளை விடுவித்துக்காட்டுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆளும் கட்சி உறுபினர்களான சுரேன் ராகவன் மற்றும் தயாசிறி ஜெயசேகரவுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கம் இப்போது பேசி வருகின்றது, எனக்கு தெரிந்த வரையில் 2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து போராடி வருகின்றோம். எந்தவொரு பாராளுமன்ற கூட்டத் தொடரிலும் இந்த விடயத்தை பேசாது போனதில்லை.
ஆகவே தசாப்த காலமாக இந்த விடயங்களை நாம் பேசிக் கொண்டே உள்ளோம். 2011 ஆம் ஆண்டில் கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்த தகவல்களை பெற்றுக் கொடுக்க அவர் எனக்கு அனுமதி வழங்கினார். நானும் அதனை செய்தேன், தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தேன்.
இந்நிலையில் நேற்று அரசாங்கத்தின் தரப்பில் சிலரே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அரசாங்கமே அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆகவே இந்த விடயத்தில் கூச்சலிட்டுக் கொண்டிருக்காது அவர்களை விடுவிக்க முடியும். ஏன் அதனை செய்யாதுள்ளீர்கள்.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது குறித்தும், அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்தும் பேசிக் கொண்டு இருக்காது செய்து முடிக்க வேண்டும். அதை விடுத்து பொய்களை கூறக் கூடாது. அரசாங்கத்திற்கு உண்மையில் இது குறித்த அக்கறை இருந்தால் உடனடியாக அவர்களை விடுவித்துக் காட்டுங்கள். அதில் இருக்கும் சிக்கல் என்ன? நீண்ட காலமாக நாம் பேசிக் கொண்டுள்ளோம், இப்போது அதனை நீங்களே கூருகின்றீர்கள், அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றேன். அரசியல் கைதிகளின் விடுதலை வைத்துக் கொண்டு அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டுள்ளது.
சுரேன் ராஹவனுக்கும் அந்த தேவை உள்ளது. உங்களால் எத்தனை அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும் என நாமும் பார்க்கின்றோம். அரசாங்கத்தில் ஒருவர் இது குறித்து பேசியதை வரவேற்பதாக தயாசிறி போன்றவர்கள் கூறுகின்றனர். வரவேற்க தேவையில்லை, வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நாம் இந்த விடயங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றோம் என்ற தவறான கருத்துக்களை சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்பது சகலருக்கும் தெரியும், அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தொடர்ச்சியாக நாம் குரல் எழுப்பி வருகின்றோம். நாளை பொசன் போயா, முடிந்தால் நாளை அவர்களை விடுவித்துக் காட்டுங்கள் என நான் சவால் விடுகிறேன்.
சுரேன் ராஹவன் என்ன செய்கின்றார், அரசாங்கத்தின் சலுகைகளுக்காக அவர் அரசியல் கைதிகளை வைத்து யும் அரசியல் எனவென எனக்கு நன்றாக தெரியும் என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சுரேன் ராகவன் 15 ஆண்டுகள் நீங்கள் இந்த பாராளுமன்றத்தில் இருந்தீர்கள், உங்களால் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதனை செய்ய முடிந்தது என்றார்.
இதற்கு பதில் தெரிவித்த சுமந்திரன் நான் 11 ஆண்டுகளே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். இந்த காலத்தில் நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளேன். நீங்கள் குறைத்துக் கொண்டு இருக்காதும், அரசாங்கத்தின் பாதணிகளை சுத்தம் செய்யும் செயற்பாடுகளை கைவிடுங்கள்.
நாம் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எதனை செய்ய முடியுமோ அதனையே நாம் செய்துகொண்டுள்ளோம். எமது கட்சியின் உறுப்புரிமை கேட்டு அது கிடைக்கவில்லை என்பதற்காக அரசாங்கத்துடன் தொங்கிக் கொண்டுள்ள நீங்கள் எமக்கு அறிவுரை கூட வேண்டாம் என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் தயாசிறி கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்களும் அரசாங்கத்தில் தானே இருந்தீர்கள். அப்போது அரசாங்கத்தை பாதணிகளை சுத்தம் செய்வதை தவிர வேறு எதனை செய்தீர்கள் என்றார்.
இதற்கு பதில் தெரிவித்த சுமந்திரன் எம்.பி கடந்த காலத்தில் நூறுக்கும் அதிகமான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்காக நாம் திருப்தியடையவில்லை. ஆனால் எம்மால் முடிந்தது நாம் செய்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment