(எம்.மனோசித்ரா)
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையத்தை தெஹிவளைக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய இலங்கை பொலிசுக்கு உரித்துடைய இடமான பெல்லன்தொட்ட சந்தி, அத்திட்டிய வீதி, தெஹிவளை எனும் முகவரிக்கு பொலிஸ் தலைமையகம் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகம் யோர்க் வீதியும் விகாரை வீதியும் தொடர்புபடும் வீதிக்கு இடையில் 100 வருடங்களுக்கு அதிகமான பழைய 03 கட்டிடங்களில் இயங்கி வருவதுடன், குறித்த கட்டிடத் தொகுதியில் போதியளவு இடவசதியின்மையால் சிவில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.
பொலிஸ் தலைமையகக் கட்டிடத் தொகுதியை மிரிஹான பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்காக 2012 ஜூலை மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலைமையில் இலங்கை பொலிசுக்குச் சொந்தமான பெப்பிலியான பிரதான வீதியில் இலக்கம் 142, பெல்லன்தொட்ட சந்தி, அத்திட்டிய வீதி, தெஹிவளைக் எனும் முகவரியில் அமைந்துள்ள 14 ஏக்கர் 02 ரூட் 38.50 பேர்ச்சஸ் காணியில் பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணித்தல் மிகவும் பொருத்தமென அடையாளங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொலிஸ் தலைமையக கட்டிடத் தொகுதி மிரிஹான பிரதேசத்தில் அல்லாமல், இலங்கை பொலிசுக்குச் சொந்தமான குறித்த காணியில் நிர்மாணிப்பதற்கும், தேவைக்கேற்ற வகையில் வேறு வேறாக கட்டிடங்களின் கட்டுமானக் கருத்திட்டங்களுக்கான பெறுகை செயன்முறையை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment