சட்டத்தரணிகளின் அடிப்படை உரிமை மீறல் : இரு பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

சட்டத்தரணிகளின் அடிப்படை உரிமை மீறல் : இரு பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்டத்தரணிகள் இருவரை அச்சுறுத்தி, அவமானப்படுத்தியமை ஊடாக அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்மானித்த உயர் நீதிமன்றம், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் தலா 30 ஆயிரம் ரூபா நட்டஈடும், 10 ஆயிரம் ரூபா வீதம் வழக்கு கட்டணமும் செலுத்த உத்தரவிட்டது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த தீர்ப்பு நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துறை ராஜா, எல்.ரி.பீ. தெஹிதெனிய மற்றும் புவனேக அலுவிஹார ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் வழங்கப்பட்டது.

பலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த சமன்மலி டி சொய்ஸா சிறிவர்தன மற்றும் வத்தேகெதர பிரதேசத்தை சேர்ந்த புபுது குமார ஆகிய சட்டத்தரணிகளே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுவில், பொலிஸ் பரிசோதகர் மலவீர, உப பொலிஸ் பரிசோதகர் சந்திர ரத்ன, அம்பலாங்கொடை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர், அம்பலாங்கொடை பொலிஸ் வலய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த மனு மீதான விசாரணைகளின் பின்னர், இரு சட்டத்தரணிகளினதும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்மானித்த உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியது.

No comments:

Post a Comment