(எம்.ஆர்.எம்.வசீம்)
பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வருவார். அவரின் வருகை எமக்கு பெரும் சக்தி. அவருடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக்காட்டுவோம் என ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.
புத்தளம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், பசில் ராஜபக்ஷ பாரளுமன்றத்துக்கு வருவாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில காலத்திலேயே கொவிட் தொற்று ஏற்பட்டது. இதனால் எமது நாடு மாத்திரமல்ல வல்லரசு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இருந்தபோதும் நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்கும்போதே நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது.
வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி உட்பட அமைச்சரவை சிறந்த தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டின் உற்பத்திகளை அதிகரிக்க தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவந்தோம்.
என்றாலும் கொவிட் தொற்று காரணமாக நாங்கள் எதிர்பார்த்த வேகத்தில் எமது பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியாமல் போயிருக்கின்றது. இருந்தபோதும் கொவிட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
அத்துடன் பொருளாதாரம் தொடர்பில் சிறந்த அனுபவம் இருக்கும் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் அவருக்கு தெரிவித்திருக்கின்றோம்.
அரசாங்கத்தில் இருக்கும் நாங்கள் சிலர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து பேசினோம். இதன்பாது, அவர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தோம். அவர் எமது கோரிக்கையை நிராகரிக்கவில்லை.
எதிர்வரும் 8 ஆம் திகதி அவர் பாராளுமன்றம் வருவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அவரின் வருகை ஜனாதிபதி, பிரதமருக்கு பெரும் சக்தியாக அமையும். அதேபோன்று அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்துக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
அதனால் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்து, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியை பொறுப்பேற்பார். அவருடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக்காட்டுவோம் என்றார்.
No comments:
Post a Comment