இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 80 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகளவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தடுப்பூசி போடப்பட்ட முதல் நாள் இதுவாகும்.
இவ்வாறு ஒரே நாளில் இஸ்ரேலின் சனத் தொகை அல்லது நியூசிலாந்தின் இரு மடங்கு சனத் தொகைக்கு இந்தியா தடுப்பூசி போட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மிக முக்கிய பாதுகாப்பு ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. உலக அளவில் வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறையத் தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
3 வது அலை பாதிப்பை தடுப்பூசி போடுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று பரவலாக மருத்துவ நிபுணர்கள் கூறுவதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 80 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 69 இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் 8.30 மணி நிலவரப்படி 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வரும் நாட்களில் மேலும் வேகமெடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment