கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டில் டெங்கு நோயும் மோசமாக பரவ ஆரம்பித்துள்ளதாகவும், டெங்கு மற்றும் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களுக்கு ஆரம்பத்தில் ஒரே விதமான நோய் அறிகுறிகளே வெளிப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகின்ற நிலையில் தற்போதுள்ள கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமைகளில் இரு நோய்களையும் கையாள்வது குறித்த நெருக்கடி நிலைமைகளை அரச வைத்திய அதிகாரி சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவிக்கும் போது இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவல் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில் தற்போது நாட்டில் நிலவும் மழைக் காலநிலை காரணமாக டெங்கு நோயும் மோசமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மேலும் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாது கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவருக்கு வெளிப்படுத்தும் ஆரம்பகட்ட அறிகுறிகளே டெங்கு நோயாளருக்கும் வெளிக்காட்டுகின்றது. காய்ச்சல், உடல் வலி, தலைவலி, இருமல் மற்றும் உடல் வெப்பம் என்பன இரண்டு நோய்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளாகும்.
ஆகவே கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களுக்கு மேற்கொள்ளும் அதே பரிசோதனைகளை டெங்கு நோயாளர்களுக்கும் கட்டாயம் செய்ய வேண்டியுள்ளது.
அதன் பின்னர் எவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய முடியும். சகலருக்கும் சாதாரண மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொடுத்தால் அதனால் கொவிட்-19 வைரஸ் பரவும் அச்சுறுத்தலும் உள்ளது.
நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,811 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இந்த மாதத்தில் மொத்தமாக 545 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரணங்களும் பதிவாகியுள்ளன.
எவ்வாறு இருப்பினும் டெங்கு நோயாளர் ஒருவருக்கு நீண்ட காலம் சிகிச்சையளிக்க வேண்டியுள்ள காரணத்தினால் தற்போது வைத்தியசாலைகளில் நெருக்கடி ஏற்படும் நிலைமையொன்று உருவாகியுள்ளது.
எனவே மக்கள் தமது சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நீர் தேங்காத விதமாக வீட்டு சூழல், தோட்டம், ஏனைய சுற்றுப்புற சூழலில் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment