யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பணிப்பு! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பணிப்பு!

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரிக்குமாறு விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பொதுமக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

அந்த வகையில் யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன்குளம் மகாமாரியம்மன் திருமண மண்டபத்திற்கும், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கும் கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை கரவெட்டி பகுதிகளில் தடுப்பூசி நிலையங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடினார்.

தடுப்பூசி நிலையங்களை பார்வையிட்ட பின், சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் மேற்படி தடுப்பூசி அடுத்த கட்டம் வழங்கப்படவுள்ளதன் காரணமாக முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகளைப் விரைவாக மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்தோடு இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காத விடத்து அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.

எனவே உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரித்து மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பொலிஸ் இராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து விரைவில் அரசினால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்டமாக 50,000 தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்குமாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

அமைச்சரின் விஜயத்தின் போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு ஆளுநர் யாழ் மாவட்ட அரச அதிபர், யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளைத்தளபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

(நிதர்சன் வினோத், ஐங்கரன் சிவசாந்தன், மயூரப்பிரியன், சுமித்தி தங்கராசா)

No comments:

Post a Comment