(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் விவகாரம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிடும் கருத்துக்கள் அனைத்தும் தேர்தல் கால மேடை பிரசாரம் போன்று போலியானதாகவுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசியல் வியாபாரமாகி விட்டது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவத்தார்.
ஒரு நாடு - ஒரு சட்டம் என்ற கொள்கையினை செயற்படுத்துவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொவிட்-19 தடுப்பூசி கொள்கை திட்டத்தைகூட வகுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அவரது நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது. கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் அரசாங்கம் உலக சுகாதார தாபனத்தையும் ஏமாற்றி விட்டது என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பணயத்தடை காரணமான நாட்கூலி பெறும் நடுத்தர மக்களின் பொருளாதாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய செயற்திட்டங்களை தற்போதே செயற்படுத்த வேண்டும். இல்லாவிடின் மாறுப்பட்ட பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்று நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2500 ற்கும், 3000 ஆயிரத்திற்கும் இடைப்பட்டதாகவும், கொவிட் தாக்கத்தினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 30 ற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதா என்பது சந்தேகத்திற்கிடமாக காணப்படுகிறது..
கடந்த ஏப்ரல் மாதம் பண்டிகை காலத்தில் நாட்டை இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து முடக்குமாறும், அல்லது பயணத்தடை விதிக்குமாறும் சுகாதார தரப்பினர்களும், சுகாதார சேவை சங்கத்தினரும் ஜனாதிபதிக்கு பலமுறை எடுத்துரைத்தார்கள்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் காரணமாக கொவிட்-19 குறித்து ஜனாதிபதியும், அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை. சுகாதார தரப்பினரது புத்திசாலித்தனமான கோரிக்கைகள் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக புறக்கணிக்கப்பட்டன. இதன் காரணமாக புது வருட கொவிட் கொத்தணி தோற்றம் பெற்று அது தற்போது பாரதூரமான நிலையினை தோற்றுவித்துள்ளது.
நாட்டின் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்கூலி பெறும் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போதிலிருந்து முன்னெடுக்க வேண்டும்.
பொதுமக்களும் தற்போது அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். நாட்டு மக்களின் அர்ப்பணிப்பினை அரசாங்கம் பொறுப்புடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி வழங்கள் தற்போது அரசியல் வியாபாரமாகியுள்ளது. அரசியல்வாதிகள் தங்களின் தரப்பினருக்காக கொவிட் தடுப்பூசிகளை ஒதுக்கிக் கொள்கிறார்கள். ஆனால் நடுத்தர மக்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை. இவ்வாறான செயற்பாடு அருவருக்கத்தக்கதாகும்.
கொவிட் விடயத்தில் அரசியல் செய்வதையும், சுய நலத்துடன் செயற்படுவதையும் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களின் குறுகிய நோக்கத்திலான செயற்பாடுகள் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
No comments:
Post a Comment