(செ.தேன்மொழி)
மஹரகம நகர சபை கூட்டத் தொடரின் போது இடம்பெற்ற மோதல் தொடர்பில் நகர சபை உறுப்பினர் நிசாந்த விமலசந்திரவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹரகம நகர சபையின் இம்மாதத்திற்கான கூட்டத் தொடர் நேற்று இடம்பெற்றிருந்ததுடன், இதன்போது ஆளுந்தரப்பு உறுப்பினரான சாவித்திரி குணசேகரவுக்கும், நகர சபை உறுப்பினர் நிசாந்த விமலசந்திரவுக்கும் இடையில் முறுகல் நிலமை ஏற்பட்டிருந்ததுடன், இந்த காணொளி சமூகவலைத்தலத்திலும் பதிவேற்றிப்பட்டிருந்தது.
இந்த காணொளியில் ஆளுந்தரப்பு உறுப்பினரான சாவித்திரி குணசேகர, நகர சபை உறுப்பினர் நிசாந்த விமலசந்திரவை தாக்குவதும், பின்னர் தான் பொலிஸ் நிலையத்துக்கு செல்வதாகவும், அவரது தொலைபேசியை எடுத்தவர்களை திரும்ப ஒப்படைக்குமாறு அவர் குறிப்பிடுவதும் அதில் பதிவாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து சாவித்திரி குணசேகர மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அண்மையில் நகர சபை உறுப்பினர்களின் அறையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று, சமூகவலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பிலே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சாவித்திரி குணசேகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment