(எம்.ஆர்.ஆர்.வசீம்)
அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகளுடன் சிறந்த ராஜதந்திர உறவு இல்லை. அதனால்தான் பற்றாக்குறையாக இருக்கும் 6 இலட்சம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி இரண்டாம் கட்டம் ஏற்றுவதற்காக பற்றாக்குறையாக இருந்துவரும் 6 இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தடுப்பூசியாக நாட்டு மக்களுக்கு இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி ஆரம்பமாக ஏற்றப்பட்டது.
என்றாலும் அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை ஏற்றுவதற்கான காலம் நெருங்கி இருக்கின்றது. என்றாலும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி 6 இலட்சம் பற்றாக்குறையாக இருந்துவருவதாக அரசாங்கம் ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தது.
அதனை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த தடுப்பூசி பெற்றுக் கொள்ளப்படவில்லை.
மேலும் வெளிநாடுகள் இந்த தடுப்பூசிகளை தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு தேவைக்கும் மேலதிகமாக பெற்றுக் கொண்டு கலஞ்சியப்படுத்தி வைத்திருக்கின்றன. அதனால் அந்த நாடுகளுடன் கலந்துரையாடி, இந்த 6 இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது பெரிய விடயமாக இருக்காது.
என்றாலும் அரசாங்கத்துக்கு சர்வதேச நாடுகளுடன் சிறந்த ராஜதந்திர உறவு இல்லை. அதனால்தான் பற்றாக்குறையாக இருக்கும் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.
அத்துடன் அரசாங்கம் வெளிநாடுகளுடன் கதைத்து இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்காமல், தங்களது நண்பர்களுக்கு லாபம் பெற்றுக் கொடுப்பதற்காக தனியார் நிறுவனங்களில் இருந்து இதனை பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கின்றது.
என்றாலும் அந்த நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என தெரிவித்திருக்கின்றது. அதனால் ஒரு அரசாங்கத்திடமிருந்து இன்னொடு அரசாங்கத்துக்கே இந்த தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
அதனால் அரசாங்கம் இவ்வாறான கால கட்டத்திலும் தங்களது வியாபார நண்பர்களுக்கு லாபம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சிந்திக்காமல் வெளிநாடுகளுடன் கலந்துரையாடி, பற்றாக்குறையாக இருக்கும் 6 இலட்சம் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளை பெற்றக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment