ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களின் நிலைமை குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் போர்க் குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று முறையாக முடிவு செய்துள்ளதாக இஸ்ரேல் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர்கள் மார்ச் 3 ஆம் திகதி இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களின் நிலைமை குறித்து முழு விசாரணையைத் திறந்து விட்டதாக அறிவித்தனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்க இஸ்ரேலுக்கு ஏப்ரல் 9 (இன்று) வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த காலக்கெடுவிற்கு முன்னர் நாட்டின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை சந்தித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விசாரணைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது என்றும் அதற்கான பதிலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்பும் என்றும் வியாழக்கிழமை பிற்பகுதியில் கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி "இஸ்ரேல் போர்க் குற்றங்கள் செய்கிறது என்ற கூற்றை முற்றிலுமாக நிராகரிக்கிறது" என்றும் அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு "ஹேக் தீர்ப்பாயத்திற்கு விசாரணையைத் திறக்க அதிகாரம் இல்லை என்ற இஸ்ரேலின் தெளிவான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது".
No comments:
Post a Comment