(எம்.மனோசித்ரா)
புற்றுநோய் மூலக்கூறுகள் உள்ளடங்கிய மேலும் சில உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், எனினும் குறித்த இறக்குமதி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அவை தொடர்பில் அறிவிக்க முடியாது என்றும் இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் கூறிய விடயத்தை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் கூறிய விடயங்கள் தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானதாகும். அந்த நிலைப்பாட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இது தொடர்பில் தற்போது பரவலாகப் பேசப்படுகிறது.
எனவே எதிர்வரும் நாட்களில் இவ்விடயம் தொடர்பில் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடல்களின் பின்னர் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment