பசறை, 13ஆவது மைல் கல்லருகே ஏற்பட்ட விபத்தையடுத்து தனியார் பஸ் சாரதியும் எதிர்த்திசையில் வந்த லொறி சாரதியும், பசறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து பஸ் சாரதியை, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும், லொறிச் சாரதியை ஐந்து இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரரப்பிணைகளில் விடுவிக்கும்படியும், பசறை நீதவான் நீதிபதி சமிந்த கருணாதாச உத்தரவிட்டார்.
அத்துடன் நீதிபதி சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட லொறிச் சாரதியை, எதிர்வரும் 8ஆம் திகதி மீளவும் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பணித்தார்
பொறுப்பற்ற வகையில் பஸ்சை செலுத்தியமை, கையடக்கத் தொலைபேசியை பாவித்தமை, கடும் வேகம், சாரதி அனுமதிப்பத்திரமின்மை, பஸ் சேவை கால அட்டவணைக்குப் புறம்பாக பஸ்சை செலுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 20ஆம் திகதி காலை, பசறை 13ஆவது மைல் கல்லருகே தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் 14 பேர் பலியானதுடன், 32 பேர் காயங்களுக்குள்ளாகினர். இவர்கள் பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இவர்களில் ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பதுளை தினகரன் விசேட நிருபர்
No comments:
Post a Comment