(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அரசாங்கம் அண்மையில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அறிவித்தது. ஆனால் எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேககம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகளை சபையை சமாளிப்பதற்காகவே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா அழுத்தம் பிரயோகித்துள்ளது. இதன் காரணமாகவே மாகாண சபை குறித்து அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அரசாங்கம் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் இல்லை.
இதன் காரணமாகவே தேர்தலை காலம் தாழ்த்துவதற்காக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அரசாங்கத்திற்கு சார்பான சட்டத்தரணிகள் ஊடாக அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற செயற்பாடாகும்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இனக்கப்பாடு எட்டப்படவில்லை. அரசாங்கத்திற்குள்ளும் இனக்கப்பாடு இன்றியே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறிருக்கையில் எவ்வாறு எம்மால் யோசனைகளை முன்வைக்க முடியும் ? இந்த முறைமையை நாம் எதிர்க்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment