தகவல்களை சேகரிப்பதற்காகவே அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது மாறாக வழக்கு தீர்ப்பு வழங்குவதற்கல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த ஆணைக்குழுவால் பரிந்துரைகளை மாத்திரமே முன்வைக்க முடியும். சட்டமா அதிபரே சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார். நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை இவ்வாறான ஆணைக்குழுக்களால் மாற்ற முடியாது. மாற்ற முற்பட்டால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினால் அரசியலமைப்பின் ஊடாக நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சவாலுக்குட்படுத்த வாய்ப்பளிக்க முடியாது.
எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பிரதம நீதியரசரிடம் கோரிக்கையொன்றை கையளித்துள்ளோம்.
இதே போன்று 5 பாகங்களைக் கொண்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முதல் பாகம் மாத்திரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரிடமும் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இது அரசாங்கத்தின் தனிப்பட்ட சொத்து கிடையாது. எனவே முழுமையான அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளிக்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment