(நா.தனுஜா)
'வலுவான கண்காணிப்பின் கீழ் இலங்கையில் நான் உள்ளேனா?' என்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
கொழும்பின் பிரபல ஆங்கில நாளிதழொன்றில் கடந்த சனிக்கிழமை வெளியான செய்தியை மேற்கோள் காண்பித்து, அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கு ஏனைய உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாமுடன் சந்திப்பொன்றை நிகழ்த்தியமை தொடர்பில் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் அவ்விரு நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இடையில் சந்திப்பு நிகழ்வது மிகவும் அரிதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பங்களாதேஷ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஓர் உறுப்பு நாடாக இருப்பதாகவும், அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தென்கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங்கை சந்தித்திருந்தமையைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருப்பதாகவும் மேற்படி ஆங்கிலப்பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த செய்தியை மேற்கோள்காட்டி, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கனேடிய உயர்ஸ்தானிகர் வலுவான கண்காணிப்பின் கீழ் இலங்கையில் நான் உள்ளேனா என்று கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, டேவிட் மெக்கின்னனின் கேள்விக்கு பதிலளித்துள்ள, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மறுத்துள்ளார்.
அத்துடன், இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் கண்காணிக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment