புது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மகளிர்களின் பங்கு பிரதானமானது என 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (மார்ச் 08) இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொடிய வைரசுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் இரவு பகல் பாராது சேவையாற்றி வரும் தாதிகளுக்கு எமது கௌரவமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைய காலத்தில் மகளிர்களின் சேவைகள் பல வகையிலும் பெறுமதி மிக்கவையாக இருந்து வருகின்றன. அடுப்பங்கரையிலும், அடிமைப் பொருளாகவும் ஒரு காலத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்கள், இன்றைய நவீன காலத்தில், தமது குடும்பத்தை வழிநடத்த குடும்பத்த தலைவருக்கு உறுதுணையாக வீட்டில் இருந்தவாறே பெண்கள் தொழில் முனைவோர்களாக (Women Entrepreneurs) உருவாகிவருகின்றனர்.
உலகின் முதலாவது பெண் பிரதமர் உள்ளிட்ட பல பெருமைகளை பெற்றுள்ள எமது இந்த அழகிய நாட்டில், பிரதான மகளிர் அமைப்பொன்றுக்கு தலைமை தாங்கி வழி நடத்தக் கிடைத்தமை பெருமகிழ்ச்சியளிக்கிறது.
நாட்டின் பல இடங்களில் செயற்பட்டு வரும் எமது 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் பிரதான நோக்கம் மகளிர்களின் கரங்களை பலப்படுத்துவதாகவே காணப்படுகிறது.
சாதி மத பேதமின்றி மகளிர்களின் குடும்ப வாழ்வு மேம்பட பல்வேறு மகத்தான சேவைகளை 'காந்தா சவிய' அமைப்பு வெற்றிகரமாக செயல்படுத்திவருகிறது.
அதேவேளை தற்போதைய அரசின் கொள்கைப் பிரகடனத்திலும் மகளிர்க்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை எனது சேவைகளுக்கு மேலும் புத்துணர்வையும் புது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
பெறுமதிமிக்க இன்றைய தினத்தில் மகளிர்களின் சாதனைகள் வானலவில் உயர வேண்டுமென பிரார்த்திப்பதோடு இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment