நாட்டுக்காக தந்தை, கணவர், எனது ஒரு கண்ணையும் இழந்துள்ளேன், ஆகவே மகனையும் இழக்க ஒருபோதும் தயாரில்லை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

நாட்டுக்காக தந்தை, கணவர், எனது ஒரு கண்ணையும் இழந்துள்ளேன், ஆகவே மகனையும் இழக்க ஒருபோதும் தயாரில்லை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

(இராஜதுரை ஹஷான்)

அரசியல், பொருளாதாரம், தேசிய நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் நாடு தற்போது மோசமான நிலையினை எதிர்கொண்டுள்ளது. திருடர்கள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க எனது மகனை பலியாக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் ஊடாக நல்லதொரு பாடத்தை கற்றுக் கொண்டேன்.

இளைஞர் யுவதிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் அதற்கு ஆதரவு வழங்குமாறு எனது மகனை பணிப்பேன். தற்போதைய நிலையில் நாட்டை திருத்த முற்பட்டால் சேறு பூசும் பிரசாரங்கள் மாத்திரமே எமக்கு பிரதிபலனாக கிடைக்கும்.

நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளேன். அரசியலில் தந்தை, கணவர் என உறவுகளையும் இழந்துள்ளேன். ஒரு கண்ணையும் இழந்துள்ளேன். ஆகவே மகனையும் இழக்க தயாரில்லை. நாட்டு மக்கள் அரசியல் சிந்தனைகளில் இருந்து முதலில் மாற வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசேட ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கடந்த 8 ஆம் திகதி யூடெப் (வலையொளி) க்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட ஒரு கருத்து தவறான வகையில் திரிபுப்படுத்தி சமூக வலைத்தளங்களில் மாறுப்பட்ட கருத்துக்களை தற்போது தோற்றுவித்துள்ளன. இவ்விடயத்தை திருத்திக் கொள்ளும் வகையில் இவ்வறிக்கையின் நோக்கமாகும்.

அரசியல் பரம்பரை என்பது என்ன? அரசியல் பரம்பரை என்பது இவ்வுலகில் கிடையாது. மன்னராட்சி முறைமை காணப்படும் நாடுகளில்தான் பரம்பரை குடும்ப ஆட்சி முறைமை தொடர்கிறது. இலங்கை மக்களாணையை முன்னிலைப்படுத்திய ஜனநாயக ஆட்சி முறை நாடாகும்.

எமது நாட்டில் குடும்ப நாமத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு ஆட்சி முறைமை காணப்பட்டன. சேனாநாயக்க பரம்பரை, பண்டாரநாயக்க பரம்பரை ஆகியவையாகும்.

பண்டாரநாயக்க பரம்பரை தொடர்ந்து ஆட்சி செலுத்த வேண்டும் என்று எந்நிலையிலும், எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. குடும்ப ஆட்சி முறைமைக்கு நான் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கை அனைத்து இனங்களுக்கும், மதங்களுக்கும் மற்றும் சமூகங்களுக்கும் பொதுவானதாகும். அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய கொள்கையினை அறிமுகப்படுத்தி அதனை செயலளவிலும் செயற்படுத்தியுள்ளோம்.

எனது கொள்கையும், சுதந்திர கட்சியின் கொள்கையும், பண்டாரநாயக்காவின் கொள்கையும் ஒருமித்ததாகவே காணப்படுகிறது. அடிமட்டத்தில் உள்ளவரை தலைவராக்கியுள்ளோம்.

நாட்டில் திறமையான இளைஞர் யுவதிகள் உள்ளார்கள். அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மாத்திரம் திறமையானவர்கள் அல்ல. சாதாரண இளைஞர் யுவதிகளை ஏன் தலைவர்களாக்க முடியாது. பண்டாரநாயக்க என்ற பெயர் நாமம் உள்ள காரணத்தினால் எனது மகனை தலைவராக்க வேண்டிய தேவை கிடையாது. பண்டாரநாயக்க என்பது குடும்ப வாசகம் மாத்திரமே.

மகனை எப்போது அழைத்து வருவீர்கள் நாட்டை பாதுகாக்க என்று பலர் பலவிதமாக கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் மாத்திரம் ஏன் நாட்டை பாதுகாக்க வேண்டும். ஏன் நாட்டில் எத்தனையோ திறமையானவர்கள் உள்ளார்கள். தற்போதைய நிலையில் நாட்டை பாதுகாக்கச் சென்று சேறு பூசிக் கொள்வது பயனற்றது.

படித்த, திறமையான இளைஞர் யுவதிகள் ஒன்றினைந்து செயற்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எனது மகனுக்கு ஆலோசனை வழங்குவேன்.

திருடர்கள் ஒன்றினைந்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற எனது மகனை ஒருபோதும் பலியாக்கமாட்டேன். 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்று செயற்பட்டமையின் பயனை பெற்றுக் கொண்டுள்ளேன்.

இது நாட்டின் தனிப்பட்ட பிரச்சினையல்ல, பெயர் குறிப்பிட்டு ஒரு தரப்பினரை விமர்சிக்கும் நோக்கம் கிடையாது. நாடு தற்போது அரசியல், பொருளாதாரம், தேசிய நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

நாட்டு மக்கள் முதலில் பாரம்பரிய அரசியல் கொள்கைகளில் இருந்து மாற்றமடைய வேண்டும். அரசியல் ரீதியில் தூரநோக்குடனான சிந்தனைகளை முதலில் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும்.

எனது மகன் அரசியலில் ஈடுபட நான் எதிர்ப்பு என்பது தற்போது தெளிவாகியிருக்கும். நாட்டுக்காக பல விடயங்களை செயற்படுத்தியுள்ளேன். நாட்டுக்காக எனது தந்தை, கணவர் ஆகியோரையும் ஏன் எனது ஒரு கண்ணையும் இழந்துள்ளேன். ஆகவே மகனையும் இழக்க ஒருபோதும் தயாரில்லை.

No comments:

Post a Comment