(எம்.ஆர்.எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்பட்டுள்ளனர். அதனால் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டா்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை திருப்தியளிப்பதாக இல்லை.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் போன்ற விடயங்களை கண்டறிந்து, இதுபோன்ற தாக்குதல் ஒன்று எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதே ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் நோக்கமாகும். ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் ஆணைக்குழுவின் அறிக்கையில் அது தொடர்பான எந்த வெளிப்படுத்தலும் இல்லை.
குண்டை வெடிக்கச் செய்தவர்கள், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியும். இதன் பிரதான சூத்திரதாரிகள் இனம் காணப்படாதவரை எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் ஒன்று இடம்பெறலாம். அதனை தடுக்கவே விசாரணைக்குழு அமைத்து உண்மை குற்றவாளிகளை இனம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் விசாரணை அறிக்கையில் உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை குழு அமைத்து உண்மையான குற்றவாளிகளை வெளிப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் இந்த அறிக்கையை பார்க்கும்போது ஏமாற்றமடைந்துள்ளோம். அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளால் நாங்களும் விரக்தியடைந்திருக்கின்றோம்.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைய எங்களால் திருப்தியடையக் கூடியதாக இல்லை. அதனால் ஜனாதிபதி செயலாணி ஒன்றை அமைத்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment