உரிமைகள் பாதுகாக்கப்படக் கூடிய விதத்திலும் நடைமுறைக்குப் பொருத்தமான வகையிலும் பத்திரிகை ஸ்தாபனச் சட்டம் அமைய வேண்டும் - அமைச்சர் கெஹலிய - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

உரிமைகள் பாதுகாக்கப்படக் கூடிய விதத்திலும் நடைமுறைக்குப் பொருத்தமான வகையிலும் பத்திரிகை ஸ்தாபனச் சட்டம் அமைய வேண்டும் - அமைச்சர் கெஹலிய

(நா.தனுஜா)

ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக பிரஜைகள் அனைவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படக் கூடிய விதத்திலும் நடைமுறைக்குப் பொருத்தமான வகையிலும் பத்திரிகை ஸ்தாபனச் சட்டம் அமைய வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் பின்னணியில் ஊடகங்களின் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கும் நோக்கங்கள் எவையுமில்லை என்றும் அத்தகைய அவப்பெயருக்கு உள்ளாகும் அவசியம் தனக்கில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஊடக செயலாளர்கள் குழுவினருடன் இன்று திங்கட்கிழமை நடத்திய கலந்துரையாலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பத்திரிகை ஸ்தாபனச் சட்டம், தற்போதைய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தியமைக்கப்பட வேண்டியுள்ளது.

அண்மைக் காலத்தில் நவீன ஊடகங்கள் உள்ளடங்கலாக பல்வேறு பிரிவுகள் ஊடகத்துறையுடன் இணைந்திருக்கின்றன என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்தச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு எவரேனும் எதிர்ப்பு வெளியிடுவார்களெனின், அது பிற்போக்குத்தனமான நிலையையே ஏற்படுத்தும்.

நாட்டின் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் தனக்கு முக்கியமான பொறுப்புக்கள் காணப்படும் அதேவேளை, 21 மில்லியன் பிரஜைகள் சார்பிலும் செயற்பட வேண்டிய கடமை இருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இவற்றை தனியொரு பிரிவினரால் முன்னெடுத்துச் செல்ல முடியாதென்றும் அதற்குப் பொருத்தமான கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment