முல்லைத்தீவு குருந்தூர் மலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்கம் வடிவிலான கட்டடப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் இத் தடயப் பொருள் உண்மையில் இந்து சமய வழிபாட்டுக்கான ஆதாரம் தானா என்பதாக உறுதிப்படுத்திய தகவல்கள் எதுவும் தொல்பொருட் திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புராதன சின்னமாக காணப்படும் குருந்தூர்மலை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் கடந்த 18.01.21 தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் தொடங்கி வைத்த அகழ்வு பணிகள் இன்று வரை தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அகழ்வுப் பணி தொடக்க நடவடிக்கையின் முன்னர் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அகழ்வுப் பணியில் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்கள்.
தற்போது அகழ்வாராய்ச்சியின் போது சிவலிங்க வடிவம் கொண்ட தொல்பொருட்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் மேலும் பல தொல்லியல் தடையங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் காலப்பகுப்பாய்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் மேலும் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் தொடர்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளம், புதுக்குடியிருப்பு விசேட நிருபர்கள்
No comments:
Post a Comment