அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்றைதினம் (31) பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக புதிய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை நன்மையான விடயமே.
ஆட்சி மாறியுள்ளமையால் நடந்த உண்மைகளை அறிவதற்காக அவ்வாறான குழுக்களை அமைத்து தகவல்களை பெற்றுக் கொள்ளவதுண்டு. அந்த வகையில் அது வரவேற்கக் கூடிய விடயமே.
அத்துடன் இந்தியாவுடனும் நாங்கள் நட்புறவை பேண வேண்டும். அந்த வகையில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளமையும் நல்ல விடயமே.
சட்ட ரீதியான பிரச்சனைகள் இருப்பதால் 51 வீதத்தை இலங்கை அரசும் வேறு முதலீட்டாளர்களிற்கு 49 வீதத்தையும் வழங்கினாலேயே அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற வகையில் அது செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்காகவே அதனை வழங்குவதாக கூறுகின்றமை எதிர்கட்சி அரசியல்வாதிகள் வழமையாக கதைக்கும் விடயமே என்றார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, பிரதிபொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்ன, பிரதேச செயலாளர் நா.கமலதாசன், உதவிபொலிஸ் அத்தியட்சகர் மல்வளகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஓமந்தை விஷேட நிருபர்
No comments:
Post a Comment