பொய்யான தேர்தல் பிரச்சாரங்களே தற்போதைய நெருக்கடி நிலைக்கு பிரதான காரணம் - ரணில் விக்ரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

பொய்யான தேர்தல் பிரச்சாரங்களே தற்போதைய நெருக்கடி நிலைக்கு பிரதான காரணம் - ரணில் விக்ரமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் காலங்களில் முன்னெடுத்த பொய்யான தேர்தல் பிரச்சாரங்கள் தற்போதைய நெருக்கடி நிலைக்கு பிரதான காரணம். இந்து சமுத்திரத்தின் கேந்திர மையமாக இலங்கையை மாற்றியமைக்கும் வகையில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவே திட்டமிட்டோம். அதற்கு தற்போதைய அரசாங்கம் அப்போது இடமளிக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான பல திட்டங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்து சமுத்திரத்தின் கேந்திர மையமாக இலங்கையை நிலைப்படுத்த எதிர்பார்த்தோம்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நட்டமடையாத வகையில் செயற்படும் விதத்தில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா ஆரம்பத்தில் கோரியிருந்தது. முனையத்தின் 51 சதவீத உரிமம் துறைமுக அதிகார சபைக்கு வழங்கப்படும், மிகுதி 48 வீதத்தை ஜப்பானும், இந்தியாவும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் முழுமை பெறவில்லை. முதற்கட்ட அபிவிருத்தி பணிகள் மாத்திரம் நிறைவு பெற்றுள்ளன. இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டுமாயின் 500 மில்லியன் டொலர்களும், இதர தேவைக்காக 150 மில்லியன் டொலர்கள் தேவை. 

கிழக்கு முனையத்தின் உரிமத்தை அரசாங்கம் வசம் வைத்துக் கொள்ளவும். முனையத்தை செயற்படுத்தும் நிறுவனத்தை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு முனைய செயற்பாட்டு நிறுவனத்தின் 51 சதவீத உரிமம் அரசாங்கத்துக்கு மிகுதி குறுகிய உரிமத்தை அவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டது.

அபிவிருத்திக்காக 650 மில்லியன் டொலர் 40 வருட கால அடிப்படையில் கடனாக வழங்குவதாக குறிப்பிடப்பட்டது. முதல் 12 வருடதத்திற்கு ஒரு டொலர் கூட செலுத்த தேவையில்லை. மிகுதி 28 வருட காலத்துக்கான கடன் 0.1 வட்டி வீதத்தில் செலுத்த குறிப்பிடப்பட்டது. முதல் 12 வருட காலத்தில் நிதியை உழைத்து மிகுதி காலத்தில் செலுத்துவது கடினமாக காரியமல்ல என்பதால் அதனை ஏற்றுக் கொண்டோம்.

இந்தியாவின் அதானி நிறுவனத்திற்குதான் கிழக்கு முனையத்தை வழங்க வேண்டும் என பெயர் குறிப்பிடப்படவில்லை. துறைமுக நிர்மாணப் பணிகளில் அதானி நிறுவனம் முன்னேற்றமடைந்திருந்தது. அக்காலகட்டத்தில் கேரளாவில் விசன்ஜன் துறைமுகம் அதானி நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட வண்ணம் இருந்தது. எமது தீர்மானங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமாயின் புதிய அரசாங்கத்தில் செய்துகொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டது.

கிழக்கு முனைய விவகாரத்தை தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் தனது தேர்தல பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டது. நல்லாட்சி அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தை இந்திய நிறுவனத்துக்கு விற்பதாக போலியான குற்றச்சாட்டுக்கள் தேர்தல் மேடைகளில் குறிப்பிடப்பட்டன. அன்று குறிப்பிட்ட பொய்யான வாக்குறுதியின் விளைவை அரசாங்கம் இன்று அனுபவிக்கிறது என்றார்.

No comments:

Post a Comment