(ஆர்.யசி)
தமிழர் பூர்வீக நிலங்களை பறித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை தடுத்து, சுதந்திரத்தை இல்லாது செய்யும் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மத்தியில் இலங்கையில் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் அர்த்தமில்லை, எனவே சுதந்திர தின அழைப்புகளை நாம் ஏற்கப்போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு தமிழர் பூமியில் சிங்கள பேரினவாத அரசாங்கம் தொல்பொருள் பிரதேசங்கள் என்ற பெயரில் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
ஒருபுறம் இராணுவ நில ஆக்கிரமிப்புகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது, மறுபுறம் மரபுரிமைகள், தமிழர் அடையாளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு சிங்கள மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது.
இந்த நாட்டில் தமிழர்களும் பூர்வீகக்குடிகள், எமக்கும் இந்த மண்ணில் சம உரிமை உண்டு என்பதை இந்த அரசாங்கம் நிராகரிக்கும் விதத்திலேயே செயற்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாடுகளே இன்று துரிதமாக முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பாகும்.
எனவே இவ்வாறான நிலையில் தமிழர்களின் சுதந்திரம், உரிமைகள் மறுக்கப்படுகின்ற நாட்டில் எம்மால் மகிழ்ச்சியாக சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
ஆகவே இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் நாம் எவரும் கலந்துகொள்ள மாட்டோம்.
அன்றைய தினம் வடக்கில் இடம்பெறும் எமது உரிமைக்கான போராட்டத்தில் நாம் கலந்துகொண்டு எமது மக்களின் நியாயம், நில உரிமை, பேச்சு சுதந்திரத்திற்காக நாம் குரல் எழுப்பும் கடமை எமக்குண்டு எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment