வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும், மகனும் சடலமாக மீட்பு - பெண்ணுடன் வசித்து வந்த சந்தேகநபரை தேடி வலை வீச்சு - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும், மகனும் சடலமாக மீட்பு - பெண்ணுடன் வசித்து வந்த சந்தேகநபரை தேடி வலை வீச்சு

வீடொன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் அவரது 13 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்த கிராமத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வீட்டினுள் அருகருகே இருவரையும் சடலங்களாக மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். கொலைக்காக பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் கூரிய ஆயுதம் ஒன்றையும் பொலிஸார் வீட்டில் இருந்து மீட்டுள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (01) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கடந்த கால யுத்தத்தில், இராணுவ அதிகாரியான கணவனை இழந்த இப்பெண் தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண்ணுடன் நபர் ஒருவர் அவ்வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தினத்தன்று, குறித்த நபர் வீட்டிற்கு வந்து மது அருந்தியதாக பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று, இறந்த பெண்ணின் தாயை சந்தேகநபர் தொலைபேசி ஊடாக அழைத்து திட்டியுள்ளார். பின்னர் இறந்த பெண் தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை பிரஸ்தாப நபர் துன்புறுத்துவதாகவும் இதனால் மகனை நாளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த இறந்த பெண்ணின் தாய், பின்னர் தனது மகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர் இன்று (01) காலையில் பக்கத்து வீட்டில் இருந்த பெண் இறந்த பெண்ணின் மகன் பாடசாலைக்கு செல்லாத காரணத்தை விசாரிக்கச் சென்றுள்ளார்.

இதன்போது வீட்டின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் வீட்டின் பின் கதவு வழியாக வீட்டிற்குள் சென்றுள்ளார். இதன்போது, தாயும் மகனும் இரத்த வெள்ளத்தில சடலமாக காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அயலவர்கள் தமண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

அத்துடன் கொலையாளியைத் தேட பொலிஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டதுடன், கைரேகைகள், தடயங்களும் பெறப்பட்டுள்ளன.

கொலையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர், குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, அவர் திஸ்ஸமஹராம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் பி.ஜி. தினேஷிகா சந்தமாலி குலரத்ன (33) என்பவரும் அவரது மகன் எஸ்.ஏ. ஸ்ரீமல் சச்சீந்திர லக்‌ஷான் ரூபசிங்க (13) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்நாயக்கவின் கண்காணிப்பின் கீழ் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(பாறுக் ஷிஹான்)

No comments:

Post a Comment